Description
Language Tamil. ஸ்ரீ ரமண ஞான போதம் 9 பாகங்களும் அச்சிட்டு வெளிவந்த நிலையில் ஸ்ரீ முருகனார் சுவாமிகள் இயற்றிய அனைத்துப் பாடல்களும் உரைகளும் புத்தக வடிவம் பெற்றுவிட்டன என்றே கருதப்பட்டது. ஆனால் சமீபத்தில் அவரது கையெழுத்துப் படிகள் (manuscript) அடங்கிய தொகுப்பை ஆராய்ந்தபோது இதுவரை வெளிவராத குறிப்புரைகள் அடங்கிய இரண்டு கட்டுகள் (bundles) இருப்பது தெரியவந்தது. சுவாமிகள் இக்குறிப்புகளை அக்காலத்தில் ஸ்ரீ ரமணாச்ரமத்தால் அச்சிடப்பட்ட அறிவிக்கைப் (notice) பிரதிகளின் பின்பக்கத்தில் பென்சிலால் எழுதியிருக்கிறார். இவற்றை ஆராய்ந்தபோது பின்வரும் விவரங்கள் தெரியவந்தன.
தாம் இயற்றிய நேரிசை வெண்பாப் பாடல்களைத் தொகுத்து “அநுபூதி வெண்பா” என்னும் தலைப்பில் வெளியிட சுவாமிகள் எண்ணியிருந்தார். இவை எவ்வாறு தொகுக்கப்பட வேண்டும் என்பதற்காக வழிகாட்டுக் குறிப்புகளையும் தந்திருக்கிறார்.
இவ்வரிய குறிப்புகள் அச்சில் வெளிவர வேண்டும் என்னும் நோக்கத்துடன் இவை அவற்றிற்குரிய பாடல்களுடன் அநுபவம், உபதேசம் என்னும் இருபகுதிகளில் தொகுக்கப்பட்டு சுவாமிகள் கருதியவாறே அநுபூதி வெண்பா என்னும் தலைப்புடன் இத்தொகுப்பு வெளியிடப்படுகிறது. இத்தொகுப்பில் உள்ள 761 பாடல்களுள் 666 பாடல்கள் ஸ்ரீரமண ஞான போதத்திலும் எஞ்சிய 95 பாடல்கள் குருவாசகக் கோவையிலும் இடம் பெற்றுள்ளன.
பக்கங்கள் 200