Description
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளையொத்த மகான்களின் தொடர்பு இல்லாவிடில் செயலின்மையில் செயல், செயலில் செயலின்மை என்பன போன்ற மகா வாக்கியங்களின் உண்மையை உணர முடியாது. ஆச்ரமத்தில் நடக்கும் ஒவ்வொரு செயலிலும் அவர் கவனம் செலுத்தினாலும் எதிலுமே அவர் பற்றற்று விளங்குகின்றார். . . .
அவரது தரிசனத்தால் தங்களது பௌதிக சுகங்கள் முழுமையடையும் என்று அவரிடம் செல்பவர்கள், சீக்கிரத்திலேயே தங்கள் மடமையை உணர்ந்து அழிவற்ற ஆனந்தம் தங்களுக்காகக் காத்துக் கிடப்பதை உணரத் தொடங்குகின்றனர். தம்மிடம் தொடர்புகொண்ட ஜீவர்களின் அல்ப காமங்களை, மோக்ஷ காமமாக மாற்றியமைக்கின்றார் பகவான் ரமணர்.
உலகில் காணப்படும் துக்கத்திற்குப் பரிகாரம் வேண்டியும் சிலர் அவரிடம் செல்கின்றனர். ஏழ்மை, எழுத்தறிவின்மை, நோய், கலகம், போர் போன்ற சமூகக் கொடுமைகளைக் கண்டு பகவானைப் போன்ற மகான்கள் சும்மாயிருக்கக் கூடாதென்றும் அறிவுறுத்துகின்றனர். இத்தகைய சீர்திருத்தவாதிகளிடம் பகவான்: உலகைச் சீர்திருத்த விழையும் நீ உன்னை முதலில் சீர்திருத்திக் கொண்டனையோ! என்று கேட்கின்றார். பெரும்பாலான சீர்திருத்தங்கள் அகங்காரத்திற்குத் தீனி போடுவதாகவே அமைவதால் சமூகமோ, சீர்திருத்தவாதிகளோ உண்மையான பயனையடைவதில்லை. . . .
ஸ்ரீ பகவானது உபதேசங்களை அவரது ஒரு வாக்கியத்தினாலேயே விளக்கிவிடலாம். தன்னை அறிதலின்றிப் பின்னை யெதறிகிலென்; தன்னை அறிந்திடிற் பின் என்னை உளதறிய!. . . .
<align=right>
டாக்டர் டி.எம்.பி. மகாதேவன்
(இந்தியன் எக்ஸ்பிரஸ்; ஏப்ரல் 9, 1950)