Description
Language Tamil.ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கி அநுபூதி அடைவிக்குமொரு பார்வைக்காரனாக விளங்கிய அருணாசல ரமணன் திருவடிக்கு ஆளாகி அவன் அருள்பெற்று உய்ந்தோர் பலருள் முருகனார் தலையாயவர். குருநாதனைப் போற்றும் துதி நூல்களையும், குருநாதனுடைய உபதேச ரத்தினங்களாலான சாஸ்திர நூல்களையும், குருவருளால் தாம் பெற்ற அநுபூதியின் மாண்பை விளக்கும் அநுபவ நூல்களையும் அருளியதன் வாயிலாக வருங்கால ரமண பக்தர்களுக்குக் குன்றாத பெருநிதியை அளித்துள்ளார் முருகனார்.
“ஸ்ரீ குருரமணப் பிரசாதம்” என்னும் இந்நூலில் தமது குருநாதன் தராதரம் நோக்காத் தண்ணளியால் தம்மை ஆட்கொண்ட திறத்தையும் அவ்வருளால் தாம் பெற்ற அநுபூதியின் மாட்சியையும் தீந்தமிழ்ப் பாடல்களால் இசைத்துள்ளார். ஆன்ம சாதகர்களுக்குப் பயனுள்ள பல உளவுகளை ஆங்காங்கே உணர்த்தியுள்ளார். மேலும் தாம் பெற்ற பேரின்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்னும் பெருநோக்கால் ஆண்டான் கழலையும் ஆண்டான் அருளையும் போற்றி அவை அடியார்க்கு மகிழ்ச்சி நிறைவான மாண்பதத்தை அளிக்கும் என்று உறுதிபடக் கூறியுள்ளார். ‘அன்பர்காள், ஆண்டவன் அருட்கடலாக உள்ளான்; அருள்நாட்டம் கொண்டால் அவனது அருளை வேண்டியமட்டும் உண்ணலாம்’ என்று அனைவரையும் அழைத்துள்ளார்.