Description
Language Tamil.ரமண சந்நிதி முறையை முருகனார் தொகுத்துக் கொண்டிருக்கையில், பகவானை திருமாலாகவும் விநாயகராகவும் புத்தராகவும் இயேசு பெருமானாகவும் நபிகள் நாயகமாகவும் ஏனைய கடவுளர்களாகவும் தன் உள்ளத்தில் இருத்தியவாறே வர்ணித்து 100 பாடல்கள் எழுத எண்ணினார். திருவாசகத்திலுள்ள திருவுந்தியாரைப் பின்பற்றி உந்தீபற என்று முடியும் 70 பாடல்களை இயற்றி விட்டார். இவ்வாறு பகவானை சிறப்பித்து கூறும்போது, தாருகா வனத்தில் தவம் செய்திருந்த முனிவர்களின் செருக்கை அடக்கி அவர்களை உய்விக்கும் பொருட்டு சிவபெருமான் புறப்பட்டபொழுது, அம்முனிவர்களின் மனைவிமார்கள் பெருமானின் அழகில் மயங்கிட அதைக் கண்டு சினமுற்ற முனிவர்கள், அரக்கனையும் யானையையும் பாம்பையும் தமது தவவலிமையால் சிவபெருமானின்மீது ஏவிவிட, அவற்றையெல்லாம் தாங்கி நின்றது இறைவன் சிவனே என்று உணர்ந்து தங்கள் அறியாமையை மன்னித்து பொறுத்து தாம் உய்யும்வழி உபதேசித்தருளும்படி வேண்டிட, சிவபெருமான் உபதேசம் அருளுவதாக முருகனார் எழுதுகின்றார்.
இவ்விடத்தில் பகவானையே அவ்வுபதேசத்தை எழுதித் தரும்படி வேண்டினார். “எல்லாவற்றையும் நீங்கள் எழுதிவிட்டீர்கள். நான் எழுதுவதற்கு என்ன இருக்கிறது. அதையும் நீங்கள் எழுதிவிடுங்கள்” என்று பகவான் கூறினார். ஆனால் நீண்டகாலம் அவர் எழுதவில்லை. பகவான்தான் எழுத வேண்டுமென்றும், உபதேசத்தைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாதென்றும் பகவான் மட்டும்தான் அதை எழுத முடியுமென்றும் வற்புறுத்தினார். பகவானால் என்ன செய்ய முடியும்? எழுதுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. பகவானும் முப்பது பாடல்கள் இயற்றியருளினார். இதுவே உபதேச உந்தியார் எனப்படுவது. இது ரமண சந்நிதிமுறை திருவுந்தியாரில் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது.
பக்கங்கள் 30