Description
Language Tamil. பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் நமக்கு அளித்துள்ள அழியாச் செல்வம் அவரது உபதேச நூல்களே யாகும். இந்நூல்களில் பெரும்பகுதி தமிழ்மொழியிலும் காலப்போக்கில் திரிபடையாவாறு பாடல் வடிவிலும் அமைந்துள்ளது தமிழுலகம் செய்துள்ள பெரும் பாக்கியமாகும். தமிழ்ப்புலமை சற்று குறைவாக உள்ளவர்கள் ஸ்ரீ பகவானது உபதேச உண்மையை ஐயமற எளிமையாக உணர சீரிய நூல்களும் இப்பாடல்களுக்கு இன்றியமையாதவையே.
ஸ்ரீ பகவானது மூல உபதேச நூல்களுக்கு அடுத்து அமைந்துள்ள முதல் நூல் குருவாசகக் கோவை என்றால் அது மிகையாகாது. ஸ்ரீ பகவான் திருவாய் மலர்ந்தருளிய அரிய ஆன்மிகக் கருத்துக்களை ஸ்ரீ முருகனார் உடனுக்குடன் அழகிய தமிழ்ப்பாக்களாக்கி ஸ்ரீ பகவானிடமே கொடுத்து அவ்வுபதேசக் கருத்துக்கள் சரியாக அமைந்துள்ளனவா என்பதை ஸ்ரீ பகவான் சரிபார்த்து ஆமோதித்தபின் அவற்றை ஒரு கோவையாகத் தொகுத்து வந்தார். ஸ்ரீ பகவான் அப்பாடல்களை கவனித்து வரும்போது சில கருத்துக்களை சேர்க்கவோ அல்லது சுருங்கக் கூறி விளங்க வைக்கவோ விரும்பிய இடங்களிலெல்லாம் தாமே புத்தம் புது செய்யுட்களையாத்து இடையிடையே அமைந்தருளியுள்ளார்.
செந்தமிழ்ச் செய்யுள் நடையில் அமைந்துள்ள குருவாசகக் கோவை மூல நூலானது ஆங்காங்கே அருஞ்சொற்களைத் தாங்கி காணப்படுவதால் இந்நூலில் பொதிந்துள்ள உபதேச நுட்பங்களை சாது ஓம் அவர்கள் இந்நூலின் உட்கருத்தை துருவியாராய்ந்தும் திரு. முருகனார் அவர்களுடனே கலந்துபேசி ஆழ்ந்துணர்ந்தும் இந்தத் தெளிவுரையை ஞான நாட்டமுள்ளவர்களுக்குத் தந்துள்ளார்.
பக்கங்கள் 434