Description
இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டும் முறையான மௌனத்தையே தமது இயல்பான இடையறா உபதேசமாகக் கொண்ட பகவான் ரமணர் தமது கருணையால் மொழி வடிவிலும் உபதேசங்களைத் தொகுத்து அருளியுள்ளார். இவ்வுபதேசங்கள் பண்டிதர் பாமரர் அனைவரும் அவரவர் ஆற்றலிற்கேற்பப் பயன்பெறுமாறு செய்யுளாகவும் உரைநடையாகவும் அமைந்துள்ளன. வடமொழியில் உள்ளனவும் தமது அனுபூதிக்கு ஒத்தனவுமான நூல்களைத் தமிழில் செய்யுளாகவும் உரைநடையாகவும் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். இந்நூல்களின் தொகுப்பே ‘ஸ்ரீ ரமண நூற்றிரட்டு’ என்னும் பெயரில் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஊனினை உருக்கும் பக்திப் பனுவல்களும் உள்ளொளி பெருக்கும் ஞான நூல்களும் சாதகர்களுக்கு அரிய விருந்தாகும்.
இப்புத்தகத்தின் முதல் பதிப்பிற்கு அன்பர் சுந்தரேசய்யர் எழுதிய முகவுரையின் இறுதியில் பகவான் ஸ்ரீ மஹர்ஷிகளின் வசனாமிருதமாகிய இந்நூலால், உலகத்தில் ஆஸ்திகம் பெருகி, ஜீவர்கள் ஸர்வதுக்க நிவிருத்தி பரமானந்தப் பிராப்தி வடிவாகிய பரமைசுவரியத்தை அடைவர் என நம்புகிறேன் என்று இருந்ததைக் கண்ட பகவான் “ஏன் அடைவர் என நம்புகிறேன்” என்கிறாய்? என்று கேட்டுவிட்டுத் தம் திருக்கரத்தாலேயே அதனை “அடைவது திண்ணம்” என்று மாற்றி எழுதினார். எனவே இந்நூலைக் கற்றுணர்ந்து இதன்வழி நிற்போர் உலப்பிலா ஆனந்தம் பெறுவது உறுதி என்று பகவானே உத்தரவாதம் அளித்துள்ளார்.
பக்கங்கள் viii+287