Description
அருணாசலத்தில் ஞானவள்ளலாக விளங்கிய பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளை இவ்வுலகிற்கு அளித்த திருத்தலம் திருச்சுழி. பூமிநாதேஸ்வரர் என்னும் திருநாமங்கொண்டு சிவபெருமான் எழுந்தருளியுள்ள இத்தலம், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரமும் மணிவாசகரின் திருக்கோவையார்ப் பாடலும் பெற்ற சிறப்புடையது. பிரளயவெள்ளம் இத்தலத்தை அழிக்க வந்தபோது சிவபெருமான் பிரளயவெள்ளத்தைச் சுழித்துத் துவாரத்தில் செலுத்திக் காப்பாற்றினார். மற்றொரு பிரளயத்தின்போது சுழியற்பதியைத் தமது திரிசூலமுனையால் உயரத் தூக்கிக் காத்தருளினார்.
திருச்சுழியலின் வரலாற்றையும் அதன் பெருமைகளையும் ஸ்ரீ சூத மகரிஷி மற்ற ரிஷிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கும் இந்நூலை, ஸ்காந்த புராணத்திலுள்ள சம்ஸ்கிருத மூலத்திலிருந்து தமிழில் விசுவநாத சுவாமி மொழிபெயர்த்தார். பகவானால் பிழைத்திருத்தம் செய்யப்பெற்றபின் இந்நூல் 1946-ஆம் ஆண்டிலேயே முதற்பதிப்பாக வெளிவந்த சிறப்புடையது. அன்பர்கள் இந்நூலைப் படித்துணர்ந்து பரசிவ கருணையைப் பெற வேண்டுகிறோம். pp.70+xxxviii